மாமன்னன் ராஜராஜ சோழன் பற்றி அவதூறு: இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிபதி சரமாரி கேள்வி

திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஜூன் 5ஆம் தேதி நீலப்புலிகள் அமைப்பின் சார்பில், அதன் நிறுவனர் டிஎம் மணி என்ற உமர் பாரூக்கின் நினைவு தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் பொதுக்கூட்டம் நடந்தது. அக்கூட்ட்த்துக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நான், அக் கூட்டத்தில் பேசும்போது, ராஜராஜ சோழன் பற்றிய சில வரலாற்று உண்மைகளைக் குறிப்பிட்டேன்.

சாதியத்தை எவ்வாறு நீக்குவது, சாதி இல்லாத சமூகத்தை எப்படி உருவாக்குவது போன்றவை குறித்தும், நிலமற்ற மக்கள் – குறிப்பாக டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் – நடத்தப்பட்ட விதம் பற்றி உமர் பாரூக்கின் “செந்தமிழ் நாட்டு சேரிகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை குறித்தும் பேசினேன்.

நான் ஒரு இந்திய குடிமகன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 19 பிரிவு 1-ன் படி பேச்சுரிமை எனக்கு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமலும் முதற்கட்ட  விசாரணையை மேற்கொள்ளாமலும் காவல்துறையினர் எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. நில உரிமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலேயே பேசினேன்.

எனது பேச்சு எந்த தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் பா.ரஞ்சித் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ரஞ்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு புத்தகங்களில், குறிப்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்றிலேயே கூட பா.ரஞ்சித் பேசியது தொடர்பான குறிப்புகள் இருப்பதாகவும், ஜூன் 5ஆம் தேதி பேசிய பேச்சால் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில், 11ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பேச்சுரிமை உள்ளது; ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அப்போது நீதிபதி பாரதிதாசன், “பேச்சுரிமை இருக்கிறது என்றாலும், அதற்கு வரைமுறை இல்லையா?  தமிழக அரசு வெளியிட்டுள்ள புத்தகத்தில் ’பயிர் செய்வோர் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ளலாம்; பயிர் செய்யாதோர் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்’ என ராஜராஜ சோழன் காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ராஜராஜ சோழன் தலித் மக்களின் நிலங்களை கையகப்படுத்தினார்’ என பா.ரஞ்சித் பேசியுள்ளார். அதற்கான ஆதாரம் என்ன உள்ளது? எந்த நோக்கத்தில் இவ்வாறு பேசினார்?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பின்னர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்களுடன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளருக்கு நீதிபதி  உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி  ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார்.