தமிழக முதல்வர் மாற்றம்: வி.கே.எஸ் உள்ளே! ஓ.பி.எஸ். வெளியே!!

சர்ச்சைக்கு இடம் அளிக்கும் வகையில் ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட வி.கே.சசிகலா, அடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்க வசதியாக, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டப்பேரவை குழுவின் புதிய தலைவராக வி.கே.சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வழிமொழிந்தனர். இப்படியாக, அ.தி.மு.க. சட்டப்பேரவை குழுவின் புதிய தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் பேசிய வி.கே.சசிகலா,  ”அதிமுகவின் கொள்கைகளைக் கட்டிக் காக்கும் வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படும். ஜெயலலிதாவின் கொள்கைகளைத் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றும். பொதுச் செயலாளராக என்னை முதன்முதலாக முன்மொழிந்தவர் ஓ.பன்னீர்செல்வம். என்னை முதல்வராகப் பதவியேற்க வலியுறுத்தியவரும் ஓ.பன்னீர்செல்வம் தான்” என்றார். அங்கிருந்த ஓ.பன்னீர்செல்வம் இதை கேட்டு மனதுக்குள் சிரித்திருப்பார் என்பதில் ஐயம் இல்லை.

அதிமுக சட்டப்பேரவை குழுவின் புதிய தலைவராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தீர்மானம் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து வி.கே.சசிகலாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். வருகிற 7 அல்லது 9ஆம் தேதி வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், தமிழக வாக்காளர்களில் சுமார் 41 சதவிகிதத்தினர் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அ.தி.மு.க.வை மீண்டும் மாநில ஆட்சியில் அமர்த்தினார்கள். அவர்களில், கட்சியிலும் ஆட்சியிலும் பதவி சுகம் அனுபவிப்பவர்களைத் தவிர ஏனையோரில் பெரும்பாலானோர், சசிகலாவை தங்கள் கட்சியின் தலைவராகவே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நிலையில், அவரை முதலமைச்சராக மன்மொப்பி ஏற்றுக்கொள்வார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.