முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, சட்ட்ப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி முதலமைச்சரை வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட வேண்டும் என்றும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாக பேசுகிறார் என்ற அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குற்றச்சாட்டு’ குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், விதிமுறைகளின் அடிப்படையில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்றார்.