”மதத்தின் பெயரால் தாக்குதல் அதிகமாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது”: மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம்

மதத்தின் பெயரால் தாக்குதல்கள் அதிகமாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு 49 பிரபலங்கள் கடிதம் எழுதியுள்ளனர்
திரைப்பட இயக்குனர்கள் ஷியாம் பெனகல், அபர்ணா சென், அடூர் கோபாலகிருஷ்ணன், அனுராக் காஷ்யப், கௌதம் கோஷ், மணிரத்னம், நடிகைகள் ரேவதி, கொங்கனா சென், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.
அதில், ”நமது நாட்டில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் – கும்பல் கொலைகள் – அமைதியை விரும்பும் எங்களைப் போன்றவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது ஆத்திரத்தை தூண்டும் கூச்சலாகி விட்டது. ராமர், பெரும்பான்மை சமூகத்தினருக்கு புனிதமானவர். அவரை மாசுபடுத்த வேண்டாம்.
மேலும், மாற்றுக்கருத்து இல்லாவிட்டால், ஜனநாயகமே இருக்காது. ‘தேச விரோதி’, ‘நகர்ப்புற நக்சல்’ என்று பலவாறாக முத்திரை குத்துவதும், அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துக்காக சிறையில் அடைப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.
முஸ்லிம்கள், பட்டியல் சாதியினர் மற்றும் இதர சிறுபான்மையினரை கும்பல் கொலை செய்யும் சம்பவங்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும். இந்த கொலைகளை நீங்கள் பாராளுமன்றத்தில் கண்டித்து இருக்கிறீர்கள். அது போதுமானதல்ல. இதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எந்தக் குடிமகனும் சொந்த நாட்டில் அச்சத்துடன் வாழக் கூடாது” எனறு மோடிக்கு பிரபலங்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.